Tuesday, 23 October 2012

உறுபசி-சுயதரிசனம்!

திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி' என்னும் நாவல் மனித வாழ்க்கையின் சில அப்பட்டமான உண்மைகளை நமக்கு உள்ளத்தில் உறைக்கும்படி எடுத்துரைக்கிறது.சம்பத் என்னும் ஒருவனின் வாழ்க்கை நாவல் முழுக்க தோலுரித்து எழுதப்பட்டிருக்கிறது.அவன் நண்பர்களான அழகர்,ராமதுரை,மாரியப்பன் ஆகிய மூவருக்கும் வேறு வேறு வகையில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் சம்பத்தின் காதலி யாழினி,மனைவி ஜெயந்தி அவன் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பு என நாவல் முழுவதும் மனிதர்களின் தனிமை பக்கங்களே புரட்டப்பட்டிருக்கிறது. நாவலில் இருக்கும் முக்கியப் பாத்திரங்கள் சம்பத்,அழகர்,ராமதுரை,மாரியப்பன்,யாழினி மற்றும் ஜெயந்தி.

சம்பத்தின் மரணத்தில் ஆரம்பிக்கும் கதை அவன் நண்பர்களின் பார்வையில் அவன் வாழ்கையை சித்தரிப்பதாய் கதை நகர்கிறது.முதலில் அழகரின் பார்வையில் தொடங்கி மாரியப்பன்,ராமதுரை,ஜெயந்தியில் முடிகிறது.ஒவ்வொருவரும் சம்பத்தின் பல்வேறு முகங்களை நமக்கு திரைவிலக்கி காண்பித்துக்கொண்டே செல்கிறார்கள்.அவர்கள் வாழ்வில் சம்பத் ஏற்படுத்திய சந்தோஷங்கள் ,துக்கங்கள்,கேள்விகள்,சம்பத் வாழ்க்கையில் இவர்களினால் ஏற்பட்ட மாற்றங்கள் என சம்பத் ஒருவனின் சுயசரிதமே(சுயதரிசனமே) இந்த உறுபசி..



சம்பத் என்பவன் யார்?

சம்பத்,தன் மனம் போனபோக்கில் தான் ஆசைப்பட்ட வாழ்கையை தங்குதடையின்றி வாழ்தவன்.தன் சிறுவயது தொடங்கி இளம் பருவம்,நடு வயது என தன் வாழ்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன். தனக்கு அறிமுகமானவர்களை தன்னை வெறுக்கவும் அதே சமயத்தில் அன்புகாட்டவும் வைத்தவன்.இப்படி ஒரு வாழ்கையை வாழ நம்மால் முடியவில்லையே என நண்பர்களை ஏங்கவைத்தவன்.இயற்கைக் காதலன்.நாத்திகன்.பெண் காதலன் ஆனால் ஆபாசத்தை விரும்பாதவன்.
தன். குழந்தை பருவத்தில் செய்த குற்றத்திற்காக தன்னிடம் வெறுப்பை உமிழ்ந்த தந்தையை அடித்தவன்,குடும்பத்தை சிறுதும் வெறுக்காதவன்,தன்  மீது காதல் கொண்ட பெண் தன்னை தகுதியில்லாதவன் என ஒதுக்கிவிட்டும் அவள் மீது கோபம் கொள்ளாதவன்.தன்னைப் போல் ஒத்த கருத்தை கொண்ட மனைவியை கரம்பிடித்தவன்.முதுமையையும் வென்றவன்.சமுதாயத்தின் பார்வையில் அவன் ஒரு உருப்படாதவன்.அவனைப் பொறுத்தவரை முழுமையானவன். அவன் இருந்தவரை சந்தோஷமாய் வாழ்ந்தான்.

சம்பத் போன்றவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் அவர்களை இந்த சமுதாயம் விட்டுவைப்பதில்லை.உலகம் அவர்களுக்கு உகந்ததல்ல.ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சம்பத் இருக்கிறான்.எவரும் அதை வெளிகாட்டுவதில்லை அல்லது வெளிக்காட்டும் அளவிற்கு நெஞ்சுரம் இல்லை.

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் அவரின் மிகச் சிறந்த நாவலாக சொல்லலாம்!!

*கூடுதலாக நாவல் எங்கிலும் தாஸ்தாயெவ்ஸ்கி தெரிகிறார்.ராமகிருஷ்ணன்
தாஸ்தாயெவ்ஸ்கியின் பாதிப்பில் எழுத முயற்சித்திருக்கலாம்.இது முழுக்க முழுக்க என் கருத்தே அன்றி பொதுவானது அல்ல*









Sunday, 21 October 2012

சாஸ்திரங்களும் சங்கடங்களும்!

'தீட்டு'... இந்த வார்த்தையை கண்டுபிடித்தவர் யாராக இருந்தாலும் அவரை நான் முழு மனதுடம் பழிக்கிறேன்! சாஸ்திர சம்பிரதாயங்கள் எனப்படும் மனிதனுக்கு சிறிதும் பயன்படாத விஷயங்களை உண்டாக்கி அதில் மனிதனை முழுதாக இழக்க செய்ததே நம் முன்னோர்களின் சாதனை எனக் கருதலாம். கடவுளால் உருவாக்கப்பட்டவன் மனிதன்,மனிதனால் உருவாக்கப்பட்டது இந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும்.ஆயினும் இப்பொழுது மனிதனும் கடவுளும் அவைகளுக்கு கட்டுப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை..அன்று விரதம் இருக்கலாம் இன்று கூடாது எனவும் இன்று இந்த கடவுளுக்கு உகந்த நாள் அவருக்கு விளக்கு ஏற்றினால் விசேஷம் என்பனவெல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்களில் அடங்கும்.கடவுள் விஷயங்களை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு வருவோம்.மனிதனின் பிறப்பு,இறப்பு இதன் நடுவில் நடக்கும் அனைத்து சுப/அசுப  காரியங்களும் இந்த சம்பிரதாயங்கள் மூலமாகவே நடைபெறுகிறது.பிறந்தால் ஒரு சடங்கு, வளர்ந்தால் ஒன்று,பெயர் வைக்க ஒன்று என இன்னும் பல உள்ளன இதில் பெண் பிள்ளைகளின் நிலையோ மிகக் கொடுமை பூப்படைதலும் பின்பு அவர்களுக்கு ஏற்படும் கட்டுப்பாடுகளும் உண்மையில் நரகத்திலும் நிகழாது இவை அனைத்தையும் பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் ஒரு வீட்டில் மரணம்  நிகழ்ந்த பிறகு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்படும் கட்டளைகள் தான் மிக மிகக் கொடுமை.. இறந்தவர் நிம்மதியாய் போய்விடுவார் 'சம்பிரதாய ஆடுகள்' உயிரோடு இருப்பவர்களை விடுவதில்லை..இறந்தவரின் சொந்தங்கள் அனைவரும் பத்து நாட்கள் கோயில்களுக்கு செல்ல கூடாது அவர்களை தொடுதல் மிகப் பெரிய பாவம்,தொட்டு விட்டால் சித்திர குப்தர் எண்ணெய் சட்டியில் போட்டுவிடுவாரோ? ஆடுகளுக்குகே வெளிச்சம்.. இறந்தவரின் குடும்பத்தார் யாதொரு பூஜைகளுக்கும் சுப காரியங்களுக்கும் பத்து நாட்கள் செல்லக் கூடாது..இவை பத்து நாட்களோடு முடிவதில்லை. ஒரு வருடம் வரை அவர்கள் எந்த பண்டிகையையும் கொண்டாடுவதர்க்கில்லை..
இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றாதார் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை..மனிதனை சீர்படுத்த இவை அவசியமே அன்றி மனிதனின் மனதை சீர்குலைக்க அல்ல என்பதை இந்த 'சம்பிரதாய ஆடுகள்' புரிந்துகொள்ள வேண்டும்..எதிர்கால சந்ததியர் இந்த கருமங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு மட்டுமல்லாமல் ஆடுகளையும் ஒழிப்பர் என நம்புவோமாக !!!!!!